Wednesday, February 29, 2012

விடியல்



அனைத்துமே
இருளாகத்தான் இருக்கின்றன
கூடவே
மனித மனங்களும் 



தொலைத்துவிட்ட
சந்தோசங்களை
ஒரே விடியலில்
பார்க்கிறேன்.........

கண்டவை
கனவு என்று
விடியும் வரை
தெரியாது ...

விடியலின்
மகிழ்ச்சியில்
சிந்திக்கிறேன் ...
முடியும் வரை
தெரியாது 
வாழ்வது எப்படி என்று ?

முடிவில்
ஓர் ஆரம்பம் ....
பல தனி மரங்கள் தான்
தோப்பானது....

இந்த தொடர்ச்சி-அழகிய 
விடியலை நோக்கி ....


Sunday, February 26, 2012

வேட்கை


பனித்துளி போல் ஒரு வாழ்கை
அதில் -ஆயிரம் ஆயிரம் ஆசை
வெற்றியில் திளைத்திட வேட்கை
வளமாய் வாழ்ந்திட பேராசை
கண்ணீர் கண்டால் பெரும் சோகம்
துன்பம் வந்தால் பெரும் துக்கம்
இன்பம் மட்டுமே வேண்டி ஏக்கம்
மரணம் இன்றேல் என்று தாகம்

இழப்புகள் இன்றி வெற்றி கிட்டுமா?
துன்பம் இன்றி இன்பம் கிட்டுமா ?
அன்பு கொன்று வாழ்கை வெல்லுமா?
பாச வேஷம் களைந்து சொல்லடா
எதையும் தாண்ட துணிந்து நில்லடா
பகையும் தோற்று பணிந்து செல்லுமே

உனது வாழ்கை உந்தன் கையில்
எளிய உழைப்பு வழிய கையில்
துவண்டு போனால் தோல்வி உன்னில்
துணிந்து சென்றால் உலகம் பையில் . 

Saturday, February 25, 2012

உறவு

 எனை பொறுத்த வரை உறவு என்பது விடையில்லா வினா.மூன்று பேருக்கு சுவனம் கிடைக்காது அதில் ஒருவர் உறவுகளை வெறுப்பவர் .நிச்சயம் அப்படிப்பட்டவருக்கு சுவனம் கிடைக்கக் கூடாது தான்.பிரச்சினை நடக்கிற பொழுது வீதியில் நின்று வம்பளக்கும் உறவும் மிகுதியாக்கிப் பேசும் உறவும் நான் அறியாததல்ல .தேவைக்கு மாத்திரம் பேசும் உறவும் உண்மை அறியாது உறவு வேண்டாம் எனும் உறவும் இந்த சமூகத்தில் இடம் பிடிக்காததல்ல. இத்தனை நடந்த பிறகு என்ன உறவு ?எனும் உறவு தேவை தானா?உறவுக்கு விளக்கம் என்ன?உனக்கு தெரியாதது அல்ல .


Saturday, February 18, 2012

உனக்கு நிகர் நீ...!



உனைப்பற்றி
எழுத நினைத்த போது
ஒரு கணம்
தமிழ் மறந்து போய் விட்டது
எனக்கு .

சிங்கத்தின் அவையில்
சிற்றெறும்பு
கவி பாடுமா?

இருந்தும்
வானத்து மழையா ?
இல்லை
மடை திறந்த வெள்ளமா?
சிந்தித்து சிந்தித்து
'நயாகரா' என
ஆறுதல் கொள்கிறது
என் மனது

உனை
இலக்கியச் சிறைப்பிடிக்க
நினைத்து
ஆயுள் கைதியானேன்
நான் !

இலக்கணம் எதுவுமின்றி
தலைக்கணத்துடன்
சந்தமின்றி
நேற்றுப்  பெய்த
 மழைக்கு-தளிர் விடும்
காளான்களுக்கு
மத்தியில்
உனக்கு நிகர்
நீயே தான் .

கலை நீரை
உள்வாங்கிய
கருமேகமாய்
கவி மழை பொழியும்
உனக்கு -கொடுக்க
எதுவுமில்லை
என்னிடம்
அதனால்
வடித்திருக்கிறேன் .

வார்த்தைகள்
தடுமாறுகின்றன -என்
கவி வாசல் மூடப்பட்டு
திறந்திருப்பது
உன் ஆற்றல் மட்டும் தான்
நுழைவதற்கு
நான் தகுதியானவள்
அல்ல .
தோற்று திரும்பி போகிறேன் .













Saturday, February 11, 2012

புரட்டாத பக்கங்கள்



உன் வாழ்க்கைச்
சரித்திரத்தின் 
அந்தப் பக்கங்களை 
புரட்டிப்பார்க்கிறேன் 

பள்ளிக்காலம் 
பாடம் கற்றுத்தரவில்லை 
பருவ வயது 
பக்குவப்படுத்தவில்லை 
இணைப்பாடவிதானம் 
ஈடுகொடுக்கவில்லை 
உறவுகள்
ஊ க்கப்படுத்தவில்லை 
உணர்வுகள் 
உறுதிப்படுத்தவில்லை 
நீ நீயாக இல்லை .

தோழனே ,
எடிசனுக்கு ஊகக்கம் 
தந்தவர் யார் ?
ஆப்ரகாம் லிங்கன் 
எப்படி ஜனதிபதியானான் ?
சோக்ரடீசுக்கு
தத்துவம் 
பயிற்றுவித்தவர் யார்?
இவை உனக்குள் நீ 
தொடுக்கவேண்டிய 
வினாக்கள்.

நண்பனே 
நட்புக்கள் -உன் மீது 
நாட்டியம் பயின்றாலும் 
நடை பயில வேண்டியது 
நீ தான் .

உன் உதவும் கரங்கள் தான்
உனக்கு முதுகெலும்பு 
உறுதியோடு போராடு 
விளக்கில் விழுந்து சாக -நீ 
விட்டில் பூச்சியல்ல .
பாரெங்கும் பறந்து திரியும் 
பட்டாம் பூச்சி என்பதை 
புரிவாய் . 

Sunday, February 5, 2012

நண்பனின் கேள்விக்கென்ன பதில் ?

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி .சமுதாயத்தில் நிகழும் ஒன்றை கதைகளாகவோ கட்டுரைகளாகவோ சிறுகதைகளாகவோ சிட்பமாகவோ சித்திரித்துக் காட்டுதலை இலக்கியம் என்கிறோம் .நாம் சாதாரண கண்களால் நோக்கும் விடயங்களை கவிஞன் அல்லது கலைஞன் கலைக் கண் கொண்டு நோக்குகிறான்இப்படி பேசிக்கொண்டிருந்த வேளை,
                                 என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் ,மருத்துவம் கற்பதால் பயனுண்டு .வர்த்தகம் கற்பதால் பயனுண்டு.கணிததுறையில் கற்றால் பயனுண்டு .ஆனால் நீங்கள் கலைத்துறையில் தமிழைக் கற்று என்ன பயன் ?எப்படி வருமானம் ஈட்டலாம் ?இதனால் யாருக்கு பயன்?என்று கேட்டார் .ஒரு நிமிடம் நானும் யோசித்தேன் .அவர் கேட்பதும் சரிதான் .இலக்கியம் ,தமிழ் என்று இருந்தால் என்ன பயன் ?மடத்தனமாக நானும் தமிழை துறை போக கற்பதால் என்ன பயன் உண்டு ?கலைமாணி பட்டத்தை  வேறு   துறையில் பயிலலாம் .என முடிவுக்கு வந்தாலும் தமிழை போல் இனிதான மொழி எங்கினும் காண்கிலேன் .

இந்த ஆக்கத்தை படிப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள் என் நண்பனின் கேள்விக்கான விடையை .எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது .

Friday, February 3, 2012

நீண்ட நாட்களுக்கு பிறகு

என் எழுத்துக்களை நீண்ட நாட்களாக காணவில்லை என பலரதும் மின்னஞ்சலை பார்த்து பரவசமடைந்தேன் .காரணம் கடந்த 2  வாரங்களாக காய்ச்சல் கடுமையாக வாட்டி எடுத்து விட்டது எனலாம் .என் எழுத்துக்களை வாசிக்க இத்தனை வாசகர்கள் உண்டா என அதிசயித்து விட்டேன் .எப்போதும் எதனையும் பெரிதாக நினைத்து பழகியதில்லை என்பதனால் நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஓய்வாக இருந்திருக்கிறேன் என்பதை கூட வாசகர்கள் சொல்லியே அறிய முடிகிறது.மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி .