Wednesday, June 1, 2016

வராத வெள்ளம்

கங்கை பெருக்கெடுக்க
பாய்ந்தோடி வந்த நீர்
உயர்வர்க்கத்தினர் வாழும்
தெருக்கள் கண்டும்
அவர்களின் வீடுகள் கண்டும்
பின் வாங்கியோடி
ஏழைகளையும்
மத்தியவர்க்கத்தையும்
தேடிச் சென்று வெள்ளக்காடாக்கிற்று.

வடிந்திட்ட வெள்ளம்
சேறாய் மாறி அந்தத் தெருவை
விட்டகன்று பயத்தில்
சேரிப்புறச்சுவருக்குள் ஒழிந்து கொண்டனவே
சேறுக்கும் நீருக்கும்
பிரித்தறியத்தெரிந்த வர்க்க பேதம்
வயிற்றுப்பசிக்கு மட்டும்
தெரியாமல் போனதுவோ

மண் மீசையில்
ஒட்டவில்லை என்பதனை
வானுயரப்பறந்த விமானம்
படம் எடுத்துக்காட்டிட
ஊடகங்களும் வெளியிட்டன...

Saturday, May 7, 2016

அந்த 7 அரை மாதங்கள் - அங்கம் 01

பெண் என்பவள் இறைவனின் மிக அழகான படைப்பு.ஒவ்வொருவருக்குமுள்ள இரசனை அவரரவர் சுவையை பொறுத்து வேறுபடுகின்றது.பெண்ணுக்கான குணாம்சங்களும் விருப்பபுகளும் எதிர்பார்ப்புகளும் யதார்த்தமானது.நாம் நினைப்பது வேறு.இறைவனின் நாட்டம் என்பது வேறு.

இறைவனின் நாட்டப்படியே என் வாழ்விலும் திருமணம் நடந்தேறியது.கல்யாணம் முடித்து இன்பகரமான வாழ்வு பாரதிராஜாவின் திரைப்படம் போல மிக அமைதியாக மேடு பள்ளமற்று சமதரையில் பயணிப்பதுபோன்றதொரு உணர்வை ஏற்படுத்திற்று.  எனக்கமைந்த வாழ்வும் என் கணவனின் குணப்பண்புகளும் ஆனந்தத்தின் உச்சிக்கு எனை அழைத்துச் சென்றது என்பது விமர்சகர்களுக்கு புள்ளி வழங்குவது போன்றது.

ஒருவரின் திருமணம் குறித்து இந்த சமூகம் என்ன பேசும் என்பதனை நான் நன்கறிவேன் ஏனெனில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட முன்னரும் ஏப்பம் விட்டுக்கொண்டும் விருந்து கொடுத்தவரையே சேர்ப் எக்ஸல் போட்டு கழுவும் ஆசிரியர்களைக் கண்டிருக்கிறேன். இதில் என் விருந்துபசாரம் பற்றி சொல்லவும் வேண்டுமா?சிங்களப் படத்துக்கு போஸ்ட்டர் ஒட்டியது போன்று என் திருமணமும் பேசப்பட்டதற்கு காரணம் நான் என் கணவரிடம் கேட்டிருந்த மஹர் தொகை தான்.அதனை ஏதோ ஐஸ்வர்யா அமிதாப்பச்சன் மகன திருமணம் செய்த ரேஞ்சுக்கு ஒரு சில உறவினர்களும சில நண்பர்கள் போன்ற பெயரில் உலாவும் பொறுக்கிகள் விமர்சித்ததாக அறியக் கிடைத்தது.மஹர் தொகையை தீர்மானிக்கும் முழு உரிமையும் மனமகளுக்கானது என்றும் அதனைக் கூட்டுதல் குறைத்தல் தொடர்பில் கணவன் மனைவிக்கே உரிமை உண்டென்கிற அடிப்படை அறிவில்லாத மூன்றாம் கிளாஸ் பேர் வழிகள் என் கணவனை மிகக் காரசாரமாக விமர்சித்தாகவும் பின்னாளில் பௌராணிகர்கள் கதை கூறினர்.

இரண்டரை மாதங்களின் பின் என் கணவனை பிரிய நேரிடும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.எங்களின் மகிழ்ச்சியில் முக்கிய பங்கு அந்த வீட்டுக்குரியது.மயக்கம் விளைவிப்பது மாலை மாது மது போன்றவை மட்ட்மல்ல.கடலும் காற்றும் கரையும் அலையும் அதில் எழும் நுரையும் தான் என்பதனை அந்த வீட்டின் ஜன்னலூடாக பார்த்து நிரூபித்து  வியந்துள்ளேன்..
அலைகள் ஒயாது ஒன்றை ஒன்று துரத்தி விளையாடுதல் போல நாங்கள் இருவரும் அறை அறையாக மூடி விளையாடியது அவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் நினைத்திருக்கவில்லை..

என்னுடைய பிரச்சனைகளையும் கவலைகளையும் அல்லாஹ்விடம் கொடுத்துவிட்டு நான் ரிலாக்ஸ் ஆக இருந்து விடுவதனைத்தான் வழக்கமாக்கி இருந்தேன்.வழக்கத்துக்கு மாறாக அவ்வளவு பெரிய பாரத்தையும் வலியையும் எதிர்பார்த்திருக்கவில்லை





Tuesday, May 3, 2016

அந்த 7 அரை மாதங்கள்

என் வாழ்வின் மறக்க முடியா அந்த 7 அரை மாதங்கள் பற்றி டயரிக்குறிப்புக்கள் எழுதியிருந்தேன்.என்னை முழுமனிதனாக மாற்றியதும் மனிதர்களைப்பற்றி மிக அழகாக கற்றுத்தந்ததும் அந்தக் காலப்பகுதி தான்.ஒர் இளம் பெண் சமூகத்தில் எப்படியான அவமானங்களைச் சந்திக்கக்கூடாதோ அவை அனைத்தனையும் சந்தித்தாயிற்று.இப்போது என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அவற்றை சிறு புன்னகையால் கடந்து செல்கிறேன்..ஆனாலும் என் நலன் விரும்பிகள் அந்தக் காலப்பகுதியை நிச்சயம் எழுத்தில் வெளிக்கொணர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.என் விருப்பமும் அதுவாக அங்கம் அங்கமாய் இனித் தொடரும்.

Monday, May 2, 2016

கேள்விக்குறியாகும் பெண் கல்வி


பொதுவாக பெற்றோர் தம் பிள்ளைக்கு உயர் ரகமான உணவைக் கொடுக்கவும் உயர் ரக ஆடைகளை வாங்கிக் கொடுக்கவும் ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசவும் பழக்கினால் போதும் என்றிருக்கிறார்களே தவிர பிரச்சினை ஏற்படும் போது அதனை எதிர்கொள்ளவும் சவாலுக்கு எவ்வாறு  முகம் கொடுப்பது போன்றவற்றை ஊட்டி வளர்ப்பதில்லை.வெறும் பேகர் பன் உணவாகக் கொடுத்தாலே தனது பிள்ளை ஹை பையாக வளருகிறது என்ற பெருமிதத்தோடு இருந்து விடுகின்றனர்.

குறிப்பாக பெண் பிள்ளைகள் பாடசாலையில் சின்ன விடயத்திற்காக அழுவதும் ஆசிரியர் அதட்டினால் காய்ச்சல் வருவதுமாக தங்களை மிகவும் பலவீனப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்கு பெற்றோரின் வளர்ப்பே காரணமாக அமைகிறது.

பெண்பிள்ளைகளை தனியே பாடசாலைக்கோ பிரத்தியேக வகுப்புகளுக்கோ அனுப்ப முடியல என்று சில பெற்றோர் அங்கலாய்த்துக்கொள்கின்றனர்.அதனால் தம் பெண் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோரும் கூடவே சென்று காத்திருந்து கையுடன் கூட்டிக்கொண்டு வருவதனை தினமும் கண்ணாரக்காண்கிறோம்.

கலாசாரத்தை விடுத்து கலர்புல் பற்றியே யோசிப்பதனால் தான் இந்த நிலைமை.உங்கள் பெண் பிள்ளைகளுக்கு குதிரையேற்றத்தை கற்றுக்கொடுக்காவிடினும் தற்காப்புக் கலை தான் தெரியாவிடினும் குறந்தது பிரச்சினையை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் தைரியத்தையும்  துணிச்சலையும் ஊட்டி வளருங்கள்.

கொழும்பு வாழ் பெற்றோர்களே மேற் சொன்ன விடயத்தில் பெரிதும் உள்ளடக்கப்படுகின்றனர்.மாணவிகள்  கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என்பதற்கு அண்மையில் வெளியான க.பொ.த.சா/தர பெறுபேறுகள் சான்று பகர்கின்றன.ஆனால் உயர் தரம் கற்று பல்கலைக்கழகம் செல்வோரின் தொகை கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மிகக் குறைவு.அதற்கான பல காரணங்களில் பிரதான இடம் வகிப்பது பாடசாலைக்கு தனியாக அனுப்ப முடியாதிருப்பதும் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்ப முடியாமையுமாகும் அவ்வாறு கல்வியைத் தொடர வேண்டுமெனில் பெற்றோரும் பிள்ளைகளின் பின்னால் அழைய வேண்டி இருப்பது என்பதாகும்.

கொழும்பு வாழ் பெற்றோர் இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுப்பதுடன் நமது சமுதாயப் பெண்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்தும் ஆய்விட்குட்படுத்தி சரியான தீர்வு காணப்பட வேண்டும்.

கண்ணீருடன் "என்ன செய்ய படிக்க முடியல" என்று கூறும் மாணவிகளுக்கும் "என்ன செய்ய ஏன்ட பிள்ளைய படிக்க வைக்க ஆசதான் ஆனால் அவள கூட்டிட்டு போய் வாறத்துக்கு ஆள் இல்ல" என்று கூறும் பெற்றோருக்கும் விமோசனம் கிடைக்கப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.

 ஷாமிலா செரீப்

Saturday, April 30, 2016

மறைக்கப்பட்ட முதலாவது கூட்டுப்படு கொலையும் என் மாமனாரின் மரணமும்

தந்தையின் இழப்பு
1985 ஏப்ரல் 29ம் திகதி வாழைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள மூக்கர்கல் எனும் பகுதியில் வைத்து எட்டுப்பேர் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாக்குப் பை அளிக்கப்பட்டு அதனை மண்ணைக் கொண்டு நிரப்பப் பணிக்கப்பட்டனர் பின்னர் அந்த மண்மூடையுடன் அவர்கள் இணைத்துக்கட்டப்பட்டனர் பின்னர் உயிரோடு ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு மிகக் கொடுரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நிகழ்ந்த முதலாவது கூட்டுப்படுகொலை. அவர்களில் முதலாவதாகக் கொலை செய்யப்பட்டவர் காவத்தமுனையைச் சேர்ந்த சீனி முஹம்மது செய்ஹ் இஸ்மாயீல் என்பராவார். அப்போது அவருக்கு 25 வயதுதான்.

ஒரு விவசாயியாகவும் கூலித் தொழிலாளியாகவும் இருந்த செய்ஹ் இஸ்மாயீல் மற்றவர்களுக்கு உதவுகின்ற எண்ணங்கொண்ட மிகுந்த தைரியசாலியும் பலசாலியுமாவார். அவரைப் பற்றி அவரது நண்பர்களிடம் விசாரிக்கும் போது ஆச்சரியமிகு தகவல்களே எமக்கும் கிடைக்கப்பெற்றன. வேலை செய்யும் போது பல்வேறு விதமான நாட்டார் பாடல்களையும் இசைத்த வண்ணமும், அதே மெட்டில் சந்தர்ப்பத்திற்கேற்றவிதத்தில் சொற்களைக் கோர்த்து உடனடியாகப் பாடும் திறமையும் வாய்க்கப்பெற்றவராகவும் திகழ்ந்தார். இனிமையான குரல்வளமிக்க அவர் உச்சஸ்தானியில்தான் அதிகம் பாடுவாராம். காடு  வெட்டிக் களனியாக்க கத்தியைக் கையில் தூக்கிவிட்டால் பாட்டுக்குப் பஞ்சமே இருக்காதாம்.

பாடசாலைக் கல்வியில் ஏழாம் ஆண்டு வரை மட்டுமே நிலைத்திருந்தார். அதற்கு மேல் படிக்க அவரது குடும்ப சூழ்நிலை விடவில்லை. இவர் படிப்பதைக் காட்டிலும் வேலைசெய்து தனக்கு ஒத்தாசையாக இருப்பதையே அவரது தந்தை விரும்பியிருந்தார். அதனாலேயே எப்போதும் உழைப்பதைப் பற்றியே வழியுறுத்தினார்.

இன்றுடன் செய்ஹ் இஸ்மாயீல் மரணித்து சரியாக 31 வருடங்கள். அவரது மரணம் அதிக பாதிப்பைத் தந்தது எனக்குத்தான். அவரது மரணத்திற்காக இன்றுவரை வேதனைப்படும் ஒரு உயிர் இப்புவியில் வாழ்கின்றதென்றால் அது நான்தான். அவரை ஒரு நாளைக்கு ஐந்து வேளை நினைவுகூர்ந்து அவருக்காகப் பிரார்த்திக்கும் ஒரு ஜீவன் இருக்கின்றதென்றால் அதுவும் நான்தான். எல்லோரும் அவரை மறந்துவிட்டாலும் எப்போதும் அவரை ஞாபகத்தில் இருந்தி அவருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்திருப்பதும் நான்தான். ஏனெனில் அவர் எனது தந்தை.

இந்த மரணம்தான் என்னை வாழ்வின் எல்லாவிதமான இடர்களையும் கடந்து அனுபவித்துப் பயணிக்க வைத்தது. ஓர் அநாதை இல்லத்தில் எனது சிறுபராயத்தைச் சிறை வைத்தது. கட்டடிளமைப்பருவத்தில் இரத்தவேகத்திற்கேற்ப கட்டற்ற கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிவேகச் செயற்பாட்டையும் எனக்குள் பிரளயமாக்கியது.
இப்போதும் நான் யோசிக்கின்றேன்
பயம் என்றால் என்ன?
அச்சப்படுதல் என்றால் என்ன?
பின்வாங்குதல் என்றால் என்ன?
முதுகில் குத்துதல் என்றால் என்ன?
இவைபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

ஒரு தந்தையின் இழப்பு அதுவும் சிறுவயதில் அவரை இழந்துவிட்டால் ஒருவன் தன் வாழ்வில் எதையெல்லம் இழப்பான் என்பதற்கு நானே நல்ல உதாரணம். இந்த நாட்டில் துவங்கிய பிரிவினைவாத யுத்தம் எனக்குத் தந்த படுமோசமான பரிசு எனது தந்தையின் மரணம்தான். அது மரணமல்ல படுகொலை.

33 வருட வாழ்க்கையில் ஒருவன் எதையெல்லாம் அனுபவிக்கக் கூடாதோ, எந்தத் தளங்களிளெல்லாம் கால்வைக்கக் கூடாதோ எந்த அனுபவங்களெல்லாம் அவனுக்குத் தேவையில்லையோ அவற்றையெல்லாம் காலம் என்மீது பிசிறியடித்துவிட்டது.
அந்த அனுபங்களின் அறுவடைதான் இப்போதைய எனது எழுத்துக்கள். அந்த அனுபவத்தின் வழி நின்றே அவை முனைப்புப் பெறுகின்றன. எல்லாவற்றையும் கடந்துபோகப் பழக்கியிருக்கின்றன. எவ்விதமான பாரதூமான குற்றச்சாட்டாயினும் நெஞ்சுநிமிர்த்தி எதிர்கொள்ளப் பயிற்றுவித்திருக்கின்றன. ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து வாழ்வின் சவால்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொள்வதுதானே சுவாரஷ்யமான வாழ்க்கை. அந்த சுவாரஷ்யம் வாழ்வில் நீடிக்க வேண்டுமானால் அதற்குத் தகுந்த எதிரிகள் எமக்கு இருக்க வேண்டும். அப்படி எதிரி அமைந்தவர்கள் வரலாற்றில் தமக்கான இடத்தை உறுதி செய்துவிடுவார்கள். எதிரி அமையாதவர்கள் சாதாரணமாக வாழ்ந்து கழிவர்.

போரினால் தந்தையை இழந்த அனைத்துள்ளங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.

குழந்தைக்குப் பிறகு

நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைப்பூவில் என் எழுத்துக்கள் தடம் பதிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உமர் காலித் பிறந்த பிறந்த பின்னரான நான் முன்பை விட வேகமான இயந்திரமானேன்.இனித் தினமும் எழுத்து வேட்டை தான்.

திருமணமான பிறகு பெண்கள் காணமல் போய் விடுகிறார்கள் என்பது உண்மை தான் அதற்கான காரணங்களும் நியாயமானவைகளாக இருப்பின் மற்றவர்கள் தூண்டலாக இருப்பதும் தேவைதானே.

Friday, April 29, 2016

தனிமை


இந்த அமைதி பொல்லாதது
என்னை பனியில் உறைத்து விடுகிறது
கடலில் மிதந்து
கரையேறும் போது
மீண்டும் யாரோ வந்து
தள்ளி விட்டுச் செல்கிறார்கள்

குழந்தை தண்ணீரில் விளையாடி
மகிழ்கிறது.
என்னால் கரையொதுங்க முடியவில்லை
மீண்டு ஆழத்தினை நோக்கி நகர்கிறேன்

அண்டை வெளியது
யாருமற்ற அந்த நிலப்பரப்பு
என்னை மிருதுவாய் இழுத்துச் செல்கிறது
நான் உணர்கிறேன்
முன்னொரு போதும் கிடைத்திடாத. இனிமை..
சலனமற்ற அந்த பொழுதில்
எல்லாவற்றையும் துறந்துவிடுகிறது